என் ஆயுள் நீயே 2
இரவு உணவு நேரத்திற்குப் பின்..
தோட்டத்து கல்மேடையில் அமர்ந்து, தன்னுடைய கணவர் விஜயனிடம் ஆற்றமாட்டாது புலம்பிக் கொண்டிருந்தார் விமலராணி.
“என்னதான் சமாதானம் செய்து கொண்டாலும், ஏமாற்றத்தை தாங்கிக்க முடியலங்க” என்றார் விமலா.
“ரொம்ப அழுத்தம் கொடுத்துக்காத விமலா” என்ற விஜயன் மனைவியின் கரம் பற்றி ஆறுதல் அளித்தார்.
“மனசு ஆறவே மாட்டேங்குதுங்க” என்ற விமலா, “தரகர் போட்டோ காட்டியதும் பிரணவ் பக்கத்துல அந்தப் பொண்ணை கல்யாண கோலத்துல நிக்க வச்சு பார்த்துட்டேன். அப்படியொரு பொருத்தம். கற்பனையே மனசுக்கு நிறைவா இருந்துச்சு. ரொம்பவே ஆசைப்பட்டுட்டேன். மருமகள் நினைச்சு தான் பார்க்கவே வந்தேன். விருப்பமில்லைன்னு இப்படி பட்டுன்னு சொல்லும் எதிர்பார்க்கலங்க. இப்போ வெறும் கற்பனையா ஆகிடுச்சு” என்றார். இதயத்தின் வருத்தம் அவரின் பேச்சில் தெரிந்தது.
“என்ன நடக்கணுமோ அதுதான் நடக்கும் விமலா” என்ற விஜயன், “பிரணவ்வுக்கு அந்தப் பொண்ணு இல்லையோ என்னவோ!” என்றார்.
“என்னவோ பார்த்ததும் பிடிச்சு போச்சு. அமைதியான அழகு. இனி வேறெந்தப் பொண்ணு பார்த்தாலும் அவளுக்கு மேல உசத்தியா இருக்கணும்ன்னு தான் தோணும்” என்றார். விமலாவுக்கு அந்த பெண்ணை அத்தனை பிடித்திருந்தது. திருமணமே வேண்டாமென்று சொல்லிக் கொண்டிருந்த மகன் கூட, அவளின் புகைப்படம் பார்த்ததும், பேசுங்க என்று தன் விருப்பம் சொல்லிட, அவனுக்கு பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது என்று அகம் மகிழ்ந்து போனார். மகனின் தகிடுதத்தம் அறியாது.
“நாம் ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? பொண்ணுக்கு விருப்பம் இருக்கணுமே” என்ற விஜயன், “அந்தப் பொண்ணுக்கு பிரணவ்வை பிடிக்கலையே! நாம் என்ன செய்யறது?” என்றார்.
“அப்படி என்ன குறையை கண்டாளாம் அவள். என் மகன் மாதிரி ஒருத்தன் தேடினாலும் கிடைக்குமா?” கணவரிடம் தன் கோபத்தைக் காட்டினார் விமலா.
அதுவரை அந்தப்பெண் அமையவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்தவர் தற்போது வெகுண்டு இருந்தார். எந்த தாய்க்குத்தான் தன் மகனை வேண்டாம் என்று சொல்லிய பெண்ணை பிடிக்கும்.
“சரி விடுங்க. அவளை விட அழகான அறிவான பெண்ணை பார்ப்போம்” என்று எழுந்து உள்ளே சென்ற விமலா,
அங்கு கூடத்து இருக்கையில் அமர்ந்திருந்த மகனின் அருகில் சென்று அமர்ந்தார்.
அப்போதுதான் பிரணவ் தன் தாத்தா ராகவன் ஆறுதலாக பேசிச் சென்றிருக்க… ஆசுவாசமாக மூச்சினை இழுத்து வெளியேற்றினான்.
அதற்குள் அன்னை வரவும் சடுதியில் முகத்தை அதி தீவிரமாக ஆழ்ந்த வருத்தத்தில் இருப்பதைப்போல வைத்துக் கொண்டான்.
“விடு பிரணவ்… உலகத்துல இவள் ஒருத்தி மட்டும் தான் பொண்ணா?” என்று கோபமாகக் கேட்ட விமலா, “இருந்தாலும் பட்டு புடவையில அவ்ளோ அம்சமா இருந்தாள். பார்க்கவே அம்மன் சிலையாட்டம்” என்றார்.
அவரின் முகம் காட்டிய பாவனையில் ஒரு கணம், பிரணவ் தன் முன் கடல் காற்று முகத்தில் மோத, புடவை முனை பறக்காது இழுத்துப் பிடித்து நின்றிருந்த நனியிதழின் தோற்றத்தை அகத்தில் நிறுத்திப் பார்த்தான்.
‘அழகா தான் இருக்காள். இவ்வளவு அழகா… இத்தனை நாள் தெரியாமப்போச்சே!’ தன்னைப்போல் நினைத்தான். மனதில் இன்னதென்று விளங்கா ரசனை.
‘தெரிஞ்சிருந்தா மட்டும் என்ன பண்ணியிருப்ப?’ மனதின் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.
‘கல்யாணம் பண்ணியிருப்பியோ?’ இதயம் தொடுத்த கேள்வியில் வேகமாக தலையை உதறிக் கொண்டான்.
என்னயிருந்தாலும் விமலாவால் அப்பெண்ணை விட்டுக்கொடுக்க முடியவில்லை.
மகனுக்கு என்று பார்த்த முதல் பெண்ணே, வீட்டில் அனைவருக்கும் பிடித்துப் போயிருக்க, அந்த சம்மந்தம் தடைபட்டது அவருக்கு அதீத வருத்தம்.
“எவ்வளவு லட்சணமா இருந்து என்ன பயன். இப்படி அறிவு கம்மியா இருக்குதே” என்றார்.
‘எதே அறிவு கம்மியா!’ பிரணவ் தன் தாய் என்ன சொல்கிறார் என்று புரியாது பார்த்தான்.
அவனுக்குத்தான் நனியிதழ் பற்றி முழுதாக தெரியுமே! படிக்கும் காலத்தில் அனைத்திலும் கெட்டி அவள். அவனே அவளை பல தருணங்களில் வியந்து பார்த்திருக்கிறான். அன்னை இப்படி சொல்லவும் அவனாலே ஏற்க முடியவில்லை.
“ஏன் மாம் அப்படி சொல்றீங்க?” எனக் கேட்டான்.
“வேறென்ன சொல்றது பிரணவ்? உன்னை வேணாம் சொல்ற பொண்ணு முட்டாளா தான் இருக்கும்” என்றார்.
“அவங்களுக்கு என்ன காரணமோ? உங்க மகன் அப்படிங்கிறதுக்காக, என்னை எல்லாருக்கும் பிடிக்கணும் கட்டாயம் இல்லையேம்மா” என்றான்.
பிரணவ் முகத்தையே விமலா கூர்ந்து நோக்கினார்.
“என்ன மாம்?”
“இவ்ளோ சப்போர்ட் பன்ற? பொண்ணை ரொம்ப பிடிச்சிருச்சோ?” எனக் கேட்டார்.
ஒரு நொடி பிரணவ்வின் இதயம் நின்று துடித்தது.
“அப்படிலாம் இல்லை மாம்.” சீரற்று வெளிவந்த அவனது குரல் அவனுக்கே வித்தியாசமாகப்பட்டது.
அதுவரை வராத சோகத்தை வரவழைத்தவன் முகம் அக்கணம் உண்மையிலேயே ஆழ்ந்த சோகத்தைக் காட்டியது.
“வேணும்னா இன்னொரு முறை பேசி பார்க்கட்டுமா பிரணவ்!” விமலா மகனின் சோர்ந்த முகம் காண பிடிக்காது, நனியிதழ் வேண்டாமென்று சொல்லிய கோபம் இருந்தபோதும், மகனுக்காகக் கேட்டார்.
“வேண்டாம் மாம். பிடிக்கலன்னு சொன்ன பிறகு திரும்ப போய் கேட்கிறது, கம்பள் பண்ற மாதிரி இருக்கும்” என்ற பிரணவ் எழுந்து தனதறைக்குச் சென்றுவிட்டான்.
கண்ணாடி முன்பு சென்று நின்ற பிரணவ்வுக்கு நனியிதழின் நினைவு தான்.
ஒரே கல்லூரி. வேறு வேறு துறை. நண்பர்களா என்று கேட்டால், அப்படி சொல்லிட முடியாது. ஆனால் அவனது நட்பு வட்டாரத்தில் அவளும் அடக்கம். கல்லூரி விழா குழுவில் பழக்கம். வெளி கல்லூரிகளுக்கு போட்டிக்கென செல்லும் போது, குழு தலைவன் எனும் அடிப்படையில் அவன் தான் பொறுப்பு. பெண்கள் பலர் இருந்தாலும், அவனது நெருங்கியத் தோழி ரீமாவிற்கு அடுத்து, நனியிதழிடம் இயல்பாய் பேசிடுவான்.
ரீமாவும் நனியும் ஒரே துறை. ரீமா, பிரணவ்வுக்கு பள்ளித் தோழி. அது கல்லூரியிலும் தொடர்ந்தது. ரீமா இருவருக்கும் பொதுவான நட்பாக இருந்திட, இருவரும் நட்பு கொண்டிருந்தனர். பார்க்கும் நேரம் மட்டும் சிறு புன்னகை, தேவையான பேச்சுக்கள். அவ்வளவே அவர்களது நட்பு.
அருகில் அமர்ந்திருக்கிறான். இயல்பாய் கரம் பிடித்திருக்கிறான். ஏன் ஒரு முறை நடனப் பயிற்சியின் போது, நனிக்கு காலில் சுளுக்கு உண்டாக, எவ்வித தயக்கமும் இல்லாது, அவளின் பாதம் பிடித்து ஆராய்ந்து பார்த்திருக்கிறான். அவ்விடத்தில் யார் இருந்தாலும் அதை செய்திருப்பான். ஆனால் இன்று சொல்ல முடியாத ஏதோ ஒன்று அவனை அலைக்கழித்தது. என்னவென்று புரியவில்லை.
பிரணவ் சொந்த ஊர் திருச்செந்தூர். படித்தது கன்னியாகுமரி. விஜயன் கட்டுமானத் தொழில். விமலா கல்லூரி பேராசிரியர். கடந்த வருடம் உடல் நிலை சரியில்லாது ஒரு மாதம் படுக்கையில் இருந்தவரை பிரணவ் விருப்ப ஓய்வு பெற வைத்திட்டான். தாத்தா ராகவன் மிலிட்டரியில் இருந்தவர்.
விஜயன் சிறிய அளவில் தொடங்கிய கட்டுமானம் சார்ந்த தொழிலில், இன்று அவரது பிரணவ் குரூப்ஸ் ஆஃப் கம்பெனி வெகுபிரபலம். பிரணவ் கன்ஸ்ட்ரக்ஷன் என்று ஆரம்பத்தில் சிறிதளவு தொடங்கிய கம்பெனி. இன்று அதன் கீழ், கட்டுமானத்துறைக்கு தேவையான அனைத்து விதமான மூலப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, கட்டிடங்கள் கட்டிய பின்னர் அதனை முழுமையாக்கும் ஹார்ட்வேர்ஸ் சம்மந்தப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஏற்றுமதி இறக்குமதி, யாவும் அடக்கம். சிறிய நிறுவனம் இன்று பல கிளைகள் கொண்டு, குழுமமாக உயர்ந்து உள்ளது.
பிரணவ் விருப்பப்பட்டு மென்பொருள் சம்மந்தமாக படித்தான். அவனுக்கு கட்டிடத் துறையில் பயிற்சி மற்றும் அனுபவம் இல்லையென்றாலும், மேல்நிலை படிப்பில் தொழில் மேலாண்மை எடுத்து படித்ததால், தந்தைக்கும் தொழிலில் உதவிக்கொண்டு, தனக்கு விருப்பமான மென்பொருள் நிறுவனம் தொடங்கி, கடந்த நான்கு வருடங்களாக வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறான்.
தன்னுடைய முயற்சியில் தொடங்கிய ‘தி ஓசன் ஐடி டெக்’ பல கிளைகள் பரப்ப வேண்டும் என்பது அவனது ஆசை. தற்போது இதன் கீழ் செயலிகள் உருவாக்கம் தொழிலை தொடங்கியிருக்கிறான். இரண்டிலும் வெளிநாடு வரை அவனது அலுவலகம் போட்டிபோட வேண்டும் எனும் கனவு. அதற்கு அவன் அவனாக இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் எனும் எண்ணம்.
கனவுக்கு தன்னுடைய திருமணம் எனும் கடமை தடையாக இருந்திடக் கூடாது என நினைக்கிறான். அதனால் தான் கல்லூரி காலங்களில் பெண்களிடம் பேசினாலும், பழகினாலும் காதல் ஒன்றை மட்டும் எட்ட வைத்திருந்தான். தன்னுடைய எண்ணத்தை திசை திருப்பும் எதுவும் வேண்டாம் என்பதில் படிக்கும் காலத்திலேயே உறுதியாக இருந்தான்.
அதனால் தான் என்னவோ அவனை உயிராக நேசித்தவளின் காதலையும் உணர தவறிவிட்டான். இன்று தானாக கை சேர வந்திட்டதையும் அறியாது நழுவவிட்டு விட்டான்.
‘என்கிட்ட பொண்ணு போட்டோ காட்டின மாதிரி, இதழ் கிட்டவும் என்னோட போட்டோ காட்டியிருப்பாங்க தானே? அப்போ நான் தெரிஞ்சு தான் எனக்கு ஓகே சொன்னாளா? அவளுக்கு என்னை மேரேஜ் பண்ணிக்க விருப்பமா? எனக்காக, நான் கேட்டேன்னு நோ சொன்னாளா? நான் கேட்டதுக்கு அவளும் விருப்பம் இல்லைங்கிற மாதிரி தானே சொன்னா?’ மனமும் மூளையும் ஒன்றாக குழப்பியடித்தன.
அவனுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது. பையன் அவன் என்ற பின்னர் தான் அவள் பெண் பார்க்கும் படலத்திற்கே ஒப்புக் கொண்டாள் என்று.
“பிரணவ் ஜஸ்ட் காம் டவுன் மேன்” என்று கண்ணாடி முன்பிருந்த மேசையில் இரு கைகளையும் ஊன்றி தலை தாழ்த்தினான்.
“பிரணவ் தேவையில்லாம எதுவும் திங்க் பண்ணாத. நீ நினைச்ச மாதிரி மேரேஜ் பிளான் ஸ்டாப் ஆகிடுச்சு. அவ்ளோதான். இதை வச்சே இன்னும் கொஞ்ச நாளுக்கு தப்பிச்சிடலாம்” என்று சொல்லிக் கொண்டவன், மெல்ல தலையை மட்டும் உயர்த்தி, கண்ணாடியில் தன் முகம் பார்த்தான்.
கடல் நீல நிறத்தில், கத்தரிப்பூ கரையிட்ட புடவையில் அளவான அலங்காரத்தோடு மிதமான புன்னகையில், கருவிழிகள் பந்தாட தன் முகம் ஏறிட்ட நனியிதழின் உருவம் அவன் பிம்பத்திற்கு அருகில் கண்ணாடியில் தெரிந்திட, வேகமாக தன்னைப்போல் திரும்பி பார்த்தான்.
உண்மையிலேயே அவள் தன் பின்னால் வந்து நின்றாளோ எனும் மாயம்.
“ஊஃப்.” கைகள் இடைக் குற்றி, இதழ் குவித்து ஊதினான்.
“ரொம்ப டிஸ்டர்ப் பன்றாளே!” கீழ் உதட்டை அழுந்த கடித்து விடுவித்தான்.
“பிரணவ்… உனக்கு மேரேஜில் இன்ட்ரெஸ்ட் இல்லை. அவள் கிட்ட கேட்ட, அவளும் ஓகே சொல்லிட்டாள். சப்போஸ் உன்மேல இன்ட்ரெஸ்ட் இருந்திருந்தா, அவள் நோ சொல்லியிருக்க வாய்ப்பில்லை. தேவையில்லாம குழம்பி, டைம் வேஸ்ட் பண்ணாத” என்ற பிரணவ், அலைபேசியை எடுத்து நனியிதழ் எண்ணுக்கு “தேங்க்ஸ்” என தகவல் அனுப்பி வைத்தான்.
அவனை அளவுக்கு அதிகமாக பிடித்ததால் தான், அவனது வேண்டுகோளை நிராகரிக்க முடியாது, அவனுக்காகவே அவனை நிராகரித்தாள் என்று அவன் அறியவில்லை.
அவள் பார்த்துவிட்டாளா என்று சில நிமிடங்கள், அலைபேசி திரையையே பார்த்து நின்றவன், இரண்டு குறி நீல நிறமாக மாறாது போகவே, அலைபேசியை ஓரமாக வைத்து மெத்தையில் கவிழ்ந்து படுத்து உறக்கத்தை தழுவினான்.
அங்கு ஒரு ஜீவனை உயிரற்றக் கூடாக கதற வைத்துவிட்டோம் என்று அறியாது நிம்மதியாக துயில் கொண்டிருந்தான் குரு பிரணவ்.