வெள்ளைப்பூவே நீ எந்தன் காதலடி 4

அத்தியாயம் 4 :

“மனம்…
ஏனோ, ஒரு நிலையாய் இல்லை
ஏதோ நினைவுகள்
ஏதோ ஞாபகங்கள்
ஏதோ பேச்சுக்கள்
ஏதோ புன்னகைகள்
யாவும்…
நினைத்து மட்டும் பார்க்கக்கூடியதாகி விடுமோ?
மடிகொடு ஒருமுறை மொத்தமாய் அழுது தீர்த்துவிட…
ரணமாய் வலிக்கும் வலியிலிருந்து விடுதலை பெறுவது என்றோ!”

மொட்டை மாடியிலிருந்து தூரத்து மலை முகட்டினை வெறித்து பார்த்திருந்த நானியின் மனதிற்குள் அவ்வரிகள் ஊர்வலம் போயின.

அவன் இன்றிருக்கும் நிலையில் கடந்து போன யாவும் மீண்டும் தன் வாழ்வில் திரும்பி வரப் போவதில்லை என்பதே அவனின் எண்ணம்.

மார்பிற்கு குறுக்காகக் கட்டியிருந்த கைகளை கீழிறக்கியவன், கண்களை மூடி.. மெல்ல தனது வலது கையினால் இடப்புற நெஞ்சத்தை நீவிவிட்டான்.

பார்வையை கீழிறக்கி அங்கு பச்சை குத்தியிருக்கும் தன்னவளின் பெயரை ஆசையாய் வருடினான்.

ஏதோ… தன் மனதிற்கினியவளையே தீண்டும் சுகம் அவனுள்.

மெல்ல நினைவுகளுக்குள் புகுந்தவனின் மனதில் அன்றைய நாளின் நிகழ்வுகள் உதிக்க பட்டென்று கண் திறந்தான்.

சுட்டெரிக்கும் தீக்கங்குகளாய் அவனின் விழிகள் ரத்த நிறம் கொண்டிருந்தது.

நானியின் மனதிற்குள் பெரும் சூறைக்காற்றே வீசியது. அடிக்கும் புயல் கட்டுக்கடங்க மறுக்க தன் கையினை மடக்கி சுவற்றில் ஓங்கி குத்தினான்.

அப்போது அங்கு வந்த ஒமியா, “என்ன சுவரோட பாக்சிங்கா” என கிண்டலடித்தாள். அவள் வந்ததையே உணராதவன்… அவளின் கேலி காதில் விழாதவாறு சென்று விட்டான்.

நானி தன்னை வேண்டுமென்றே அவமதித்து விட்டதாக எண்ணியவளின் முகம் கறுத்துப்போனது. சற்று நேரத்திற்கு முன் தனது அம்மம்மா கூறியது நினைவில் வந்தது.

“இங்க பாரு மீனா…”

“அய்யோ பாட்டி… மீனா கீனான்னு கூப்பிடாதே… நீ வச்ச பேரை எவ்வளவு பேர் கிண்டல் செய்தாங்க தெரியுமா?” வராத கண்ணீருடன் கூறியவள், ஒமியா என்று கூப்பிடு என்றாள்.

அவளின் போலி அழுகையில்…

“அய்யயோ” என்று பதறிய பாண்டியம்மாள், “நிச்சயம் இனி மீனலோச்சனி கூப்பிடமாட்டேன் ஆத்தா” என்று கன்னத்தில் போட்டுகொண்டார்.

ஒமியா சரியென்று தலையாட்ட…

“உனக்கு உன் மாமன பிடிச்சிருக்கா கண்ணு”.. மெல்ல தனது பேச்சினை ஆரம்பித்தார்.

அவர் திடீரென அவ்வாறு கேட்டதும்.. முறுக்கிய மீசையுடன் அவனின் திராவிட நிற கலையான முகமும்… தேக்கு மர வலுவான தேகமும் தோன்ற அவளறியாமலே அவளின் இதழ்கள் விரிந்தன. முகம் சிவந்தது.

தன் பேத்தியின் வெட்கத்தில் அவளின் மனதினை கண்டுகொண்டவர்..

“எனக்கும் இந்த வீட்டுக்கு நீ மருமகளா வரணும்னு தான் ஆசை… அதை நீ மனசு வச்சா தான் நடத்த முடியும். அதுக்கு உன் மாமனோட மனசுல நீ இடம் புடிக்கணும்”.

“அவரை மடக்க என் அழகு போதுமே. அவரை என் காலடியில் விழ வைக்கிறேன்.”

“கல்யாணம் நடக்கும் வரை கொஞ்சம் அடக்கி வாசி, நானியோட கல்யாணம் மட்டும் நடந்துச்சுன்னு வை, நீ தான் இந்த வீட்டுக்கு ராணி.. இப்போ அவன் மாடியில தனியா இருக்கான்.. போ, மெல்லப்பேசி, உன் கைக்குள்ள போட்டுக்கப்பாரு.”

நானியை பார்த்ததும் அவனின் கம்பீரமான தோற்றத்தில் ஈர்க்கப்பட்டவள்.. அவன் தன் அத்தை மகனென்றதும், நானி எனக்குத் தானென்று மனதில் கூறிக்கொண்டாள்.

அவளுக்கு தகுந்தாற் போல் பாண்டியம்மாளும் பேச, சப்போர்டிற்கு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் நானியை தன் அழகின் மூலம் வீழ்த்தி விடலாமென மனக் கோட்டை கட்டினாள். அதன் முதல் படியாகவே அவனைத் தேடி மாடிக்கு வந்தாள்.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டதை தற்செயலாகக் கேட்ட சிவா… அவ்விடத்திலேயே மரித்தாள்.

தன்னவளின் நினைவுகளில் மூழ்கியிருந்தவன், ஒமியாவின் வரவே தெரியாது சென்றுவிட்டான்.

அவனின் பாராமுகத்தை ஏற்க முடியாதவள் “பாட்டியிடம் சொல்லியதை போல் உன்னை என் பின்னால் சுற்ற வைக்கிறேன்” என்று திமிராக நினைத்தாள்.

நேராக தனது அறைக்குள் நுழைந்த நானிக்கு இதயம் முழுவதும் வலி பரவுவதை உணர்ந்தான்.

தன்னவளுக்கு ஏதோ என உள்ளுணர்வு உந்தியது. அனைத்தும் மறந்தவனாக சிவாவைத் தேடினான்.
வீடு, தோட்டம் என்று எங்கு தேடியும் அவளில்லை. யாரிடம் கேட்பது எனவும் தெரியவில்லை. அவன் அவளைப் பற்றி விசாரிக்கின்றான் என்றாலே அவளின் உயிருக்கு ஆபத்து நேரிடுமே! எல்லாம் தெரிந்தும் வெளிப்படையாக தன்னவளைப்பற்றி யாரிடம் எப்படி கேட்டுத் தெரிந்து கொள்வான்.

இதயம் இரண்டாக பிளக்கும் வலி, நெஞ்சத்தை நீவி விட்டுக்கொண்டான்.

அவன் யாரையோ தேடுகிறான்!!. அது யாராக இருக்கக்கூடுமென்ற சந்தேகம் கபிலனுக்கு எழுந்தது. இருப்பினும் நானியிடம் நேராகச் சென்று கேட்க முற்படவில்லை.

அவனின் அலைப்புறுதலை கவனித்துக்கொண்டிருந்த நந்தினி மெல்ல தன் அண்ணனின் அருகில் சென்று… மெல்லிய குரலில், “ரஞ்சு கோயிலுக்கு போயிருக்காள்” என்றது அவள் முழுதாக முடிக்கும் முன்னே, நானி கோவிலை நோக்கி சென்றிருந்தான்.

‘என்ன நடக்கிறது? வந்து ஒரு நாள் முழுதாகவில்லை, அதற்குள் தலை வெடித்துவிடும் அளவிற்கு குழப்பங்கள்.’ என்னவென்று அறிந்துகொள்ள நானியின் பின் சென்றான் கபிலன்.

ஓட்டமும் நடையுமாக அவ்வூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயத்திற்குள் நுழைந்தவனின் கண்கள் தன்னவளைத் தேடி அலைமோதியது. மூலவர் இருக்கும் சன்னதி அருகில் செல்ல செல்ல நானியின் இதய துடிப்பு அதிகரித்தது. அதுவே சொல்லாமல் சொல்லியது அவள் இங்கு தானிருக்கின்றாள்.

கலைந்த தோற்றத்தில் கண்களில் கண்ணீருடன் இரு கரம் கூப்பி கடவுளின் முன் நின்றிருந்தவளின் கோலம் அவனின் மனதினை பிசைந்தது.

நண்பகல் நேரமென்பதால் மக்கள் நடமாட்டமின்றி கோவில் அமைதியாகக் காணப்பட்டது.

நானியின் பின்னோடு வந்த கபிலனுக்கு ஆச்சரியம்.

‘வீட்டில் சிவாவை பிடிக்காதது போல் நடந்து கொண்டவன்… இங்கு அவளின் வேதனை கண்டு துடிக்கின்றானே… அவளின் சோகம் இவனின் மனம் எவ்வாறு அறிந்தது? ஒருவேளை இதற்கு பெயர் தான் காதலா? இவர்கள் இருவரும் நடந்து கொள்வதை பார்த்தால் காதல் போன்று தெரியவில்லையே ஆனால், சிவாவிற்காக நானி துடிப்பதை பார்த்தால் காதலாக இருக்குமோ?’

கேள்விகள் மட்டும் அவனிடத்தில் அதிகரித்தன, அதற்கான பதில் எப்போது அறிவானோ! அங்கு பெரியளவில் வீற்றிருக்கும் நந்தியின் பின் மறைவாக நின்று கொண்டான் கபிலன்.

கண் மூடி நின்றிருந்தவளின் கன்னங்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது. கழுத்து பகுதியினை அடைந்தும் வற்றும் வழியின்றி ஊற்றாய் சுரந்தது. துடைக்கவும் தோன்றாமல் இறைவனிடம் தன் குமுறல்களை கொட்டினாள்.

அவளின் மனதில்… “உனக்கும் உன் மாமனுக்கும் தான் கல்யாணம்,’ ஒமியாவிடம் கூறிய பாண்டியம்மாளின் வார்தைகளினால் புயல் வீசிக்கொண்டிருந்தது.
புயலின் சேதாரம் பலமாக இருந்ததால், என்ன செய்வதென்று தெரியாது இறைவனின் ஆலயத்தில் சரண் புகுந்தாள்.

தன்னவளின் கண்ணீரை துடைக்க கூட முடியாத கையறு நிலையில் இருப்பதை அறவே வெறுத்தான். ‘இப்படி இவள் அழுவதை வேடிக்கை பார்க்கத்தான் ஓடோடி வந்தாயா?’ நானியின் மனம் அவனை குற்றம்சாட்டியது.

இவ்வளவு நேரம் நன்றாக இருந்தவள் ஏன் இப்படி அழுகின்றாள்.. புரியாமல் தவித்தவனின் காதுகளை தீண்டிய வார்த்தைகள் அவனை மகிழச் செய்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு உள்ளார்ந்த மனதுடன் சந்தோஷம் கொண்டான்.

‘என்னை ஏன் பாட்டிக்கு பிடிக்கவில்லை. அவருக்கு பிடித்த மாதிரி நான் இருந்திருந்தா என் வாழ்வும் நிம்மதியா இருந்திருக்குமே!’ உள்ளுக்குள் அரற்றியவள்.. வெளியே,
“என் மாமா இல்லாம என்னால வாழ முடியாது. அவருக்கு என்னை சுத்தமா பிடிக்காது தெரிந்தும், நான் உயிர் வாழ்றதே என் மாமாவுக்காகத்தான். அவரை பார்த்துக்கொண்டிருக்கும் இந்த சந்தோஷத்தையும் பறித்து விடாதே.”
வேதனையாக இறைவனிடம் மனதிற்குள் முறையிட்டுக் கொண்டிருந்தவள், தன்னையும் அறியாது வெளியே சத்தமாகக் கூறியிருந்தாள்.

சிவா மெதுவாக உரைத்திருந்தாலும், அவளுக்கு முன்னே மிக அருகில் நின்றிருந்த நானியின் செவிகளில் தேனாய் பாய்ந்தன அவ்வார்த்தைகள்.

“என் மாமா இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது”.

தன்னவளின் காதலில் அவனின் இதயம் உருகியது. தாறுமாறாய் துடித்துக் கொண்டிருந்த இதயம் அவளின் காதலினால் சீரானது.

“அவள் சோகத்திலிருந்தாலும் நன்றாக இருக்கின்றாள் இதுவே போதும்” என்று நினைத்த நானி… வந்ததற்கு மாறாக புன்னகை முகமாக, வந்த சுவடே அறியாது வெளியேறினான்.

“சிவா எதற்கு அழுகிறாள்… அவளுக்கு என்னவானதோ என்று பதறியடித்து வந்தவன் சந்தோஷமாக செல்கின்றானே?” கபிலனுக்கு வழக்கம்போல் என்னடா நடக்குது இங்க மொமண்ட் தான்.

குழம்பிய மனதுடன் கபிலனும் கோவிலைவிட்டு வெளிவந்தான்.

‘வீட்டிலிருப்போர் யாராவது ஒருவர் சொன்னால் தான் தெரியும், அதுவரை இப்படி குழம்பிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.’ மனதிற்குள் நினைத்தவன் வீட்டை நோக்கிச் சென்றான்.

மனதிலிருக்கும் பாரத்தை மொத்தமாக கடவுளிடம் இறக்கி வைத்தவள், தன் மனதை சமன் செய்துகொண்டு வீட்டிற்கு புறப்பட்டாள்.

நானி வீட்டிற்கு வந்ததும்… வாசலில் நின்று கொண்டிருந்த காரினை பார்த்து அவன் நெற்றியில் முடிச்சுகள் விழுந்தன.

உள்ளே நுழைந்தவன்.. அங்கிருப்போரை பார்த்தும் பார்க்காததை போன்று முன்னேறி செல்ல, “ராசா” என்ற பாண்டியம்மாளின் அழைப்பு எரிச்சலை உண்டாக்கியது.

நின்று திரும்பியவன் என்னவென்று பார்க்க.. “உன்னை பார்க்க நம்ம அமைச்சர் தம்பி வந்திருக்கு, நீ பாட்டுக்கு காணாத மாதிரி போயிட்டு இருக்க..”

பாண்டியம்மாள் கூறியது கேட்கவேயில்லை என்பதைப்போல் நானி நின்றிருக்க,

“எதிரியாவே இருந்தாலும் நம்மைத்தேடி வரும்போது உபசரிப்பது தான் பண்பாடு..” முதுகிற்கு பின்னால் ஒலித்த தந்தையின் குரலில் அவர்களிடம் சென்று அமர்ந்தான்.

அழகேசன் அப்போது தான் மாடியிலிருந்து கீழிறங்கி வந்தார்.

நானி தன் பேச்சிற்கு மதிப்பளித்து அமர்ந்ததும், தந்தையாக கர்வம் அடைந்தார்.

இந்த காலத்தில் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் எங்கு பெற்றோரின் பேச்சை மதிக்கின்றனர். கேட்டால் எல்லாம் நாகரிக வளர்ச்சி என்று மழுப்புவது. கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் புதைத்துவிட்டு நாகரிக வளர்ச்சி என்று பேசும் அறிவிலிகள்.

“வாங்க திரு.காசி” அழகேசன் அவரை வரவேற்றப்படி நானியின் அருகிலமர்ந்தார். தன் தந்தை மூன்று வருடங்களுக்கு பிறகு தனக்கருகில் அமர்ந்தது நானிக்கு வியப்பாக இருந்தது.

“என்ன ராசா.. வந்தவங்ககிட்ட பேசாம அமைதியா உட்கார்ந்திருக்க,” பெரிய அமைச்சரே தனது பேரனைத்தேடி வந்திருப்பது பாண்டியம்மாளுக்கு பெருமையாக இருந்தது. அதனால், நானியை காசியிடம் பேசுமாறு தூண்டினார்.

“தம்பியைத் தேடி நான் வீடு வரை வருவேன்னு தம்பி நினைச்சிருக்காதுங்க, அதான் தம்பி என்னைப்பார்த்த ஆச்சரியத்துல வாய் திறக்காம உட்கார்ந்திருக்கு.”

அன்று தம்பியென்று அழைக்க வேண்டாமென்று கூறியதை அவமானமாக நினைத்த காசி இன்று வார்த்தைக்கு ஒரு தம்பி போட்டு பேசினார்.

“உங்களுக்கு எப்போதும் சுற்றி வளைத்து விசயத்திற்கு வருவது தான் வழக்கமோ?” தீவிரமாக கேட்டான் நானி.

“நல்லா நீட்டி விளக்கமா சொன்னா தானே தம்பி நம்ம ஜனங்களுக்கு புரியுது. இப்படி பேசி பழகிடுச்சு தம்பி, என்ன பண்றது சுத்தி சுத்தி பேசுறது தானே, அரசியல்வாதி பொழப்பு.” வாயெல்லாம் பல்லாக பேசினான் காசி.

“அப்போ நேர் வழியில போனதேயில்லைன்னு… மன்னிக்கனும், நேரடியா பேசனதேயில்லைன்னு சொல்ல வரீங்களா?” நானியின் குரலில் அப்பட்டமாக கேலி வழிந்தது.

தன் மகனின் உட்பொருள் நிறைந்த மிடுக்கான பேச்சில் கவர்ந்த அழகேசன் நானியை ரசித்துப் பார்த்தார். எல்லாம் ஒரு நிமிடம் தான், அவன் செய்த செயல் கண் முன்னே நினைவு வர… மகன் என்ற நினைப்பைக் கட்டுப்படுத்தி காசியின் பக்கம் பார்வை பதித்தார்.

நானியின் பேச்சில் காசியின் முகம் இருள் படிய, அதனை வெளிக்காட்டாமல் கட்டுப்படுத்தி, தான் வந்ததற்கான காரணத்தை கூறினார்.

“அது வந்து தம்பி… நம்ம மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகள் சீரமைக்கும் கான்ட்ராக்ட் நமக்கே தரனும்.”

“கொட்டேஷன் சப்மிட் பண்ணுங்க” என்றவனாக நானி எழுந்து கொண்டான்.

“தம்பி என்னை நீங்க ரொம்ப அவமானப்படுத்துறீங்க”, காசியின் குரலில் அடக்கப்பட்ட சீற்றம் இருந்தது.

“அபீசியலான எந்தவொரு விஷயத்தையும் நான் வீட்டில் வைத்து பேசுவதில்லை, நான் மாவட்ட ஆட்சியர் என்பது இந்த வீட்டின் நிலைப்படியை தாண்டி வெளியில் தான்.” கம்பீரமாக தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்று கூறியவன் அவ்வளவு தான் என்பதைப்போல் வெளியே செல்லுமாறு கைகாட்டினான்.

பாண்டியம்மாளை காசி திரும்பி பார்க்க, “நீ இப்படிப்பட்ட ஒரு விஷயத்துக்கு தான் வந்திருக்கன்னு சொல்லியிருந்தா, அப்போவே உன்னை போக சொல்லியிருப்பேனப்பா” என்றார். தன் பேரன் முன்பு எப்பவும் தன்னை நியாபடுத்திக் கொள்வதிலே முனைப்பாக இருப்பார் பாண்டியம்மாள்.

“எம் பையன் கொஞ்சம் நேர்மை அது இதுன்னு இருக்கவன், அதனால நீங்க நேரடியான முறையிலே முயற்சி செய்ங்களேன்.” சொல்லியது அழகேசன்.

அழகேசனின் எம் பையன் என்ற வார்த்தை அந்நேரத்திலும் நானியினுள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. கடந்த மூன்று வருடங்களாக அவன் கேட்க நினைத்த வார்த்தை.

அழகேசனின் கிண்டல் பேச்சில், “குடும்பமே வீடு தேடி வந்த என்னை அவமானப்படுத்துறீங்களா?? இதுக்கெல்லாம் அனுபவிப்பீங்க” என்ற காசி திரும்பி செல்கையில்..
சொடக்கு சத்தம் கேட்டு நின்று பார்த்தார்.

சொடக்கிட்டது நானிலன்…
“உனக்கு இந்த கான்ட்ராக்ட் தானே வேணும்.. நான் சைன் பண்றேன். அதுக்கு முன்னாடி, தேனி மாவட்டத்தில் மொத்தம் எத்தனை அரசு பள்ளிகள் செயல்படுது சொல்லு?” என்றான்.

காசி சினத்துடன் அமைதியாக நின்றார்.

“அமைச்சராக இருந்துகிட்டு இது கூடதெரியலை, நீயெல்லாம் பள்ளிக்கூடத்தை சீரமைத்து.. போ… போ…. முதல்ல இதை தெரிஞ்சுட்டு வா.”

“நல்லா அனுபவிப்பீங்க மிஸ்டர். நானிலன். என்னை சாதாரணமா நினைச்சிடாதீங்க, நான் நினைத்தால் நீங்க இந்த பதவியில் இருக்கவே முடியாது, உங்களை இல்லாமலே ஆக்கிடுவேன்.” கோபத்தில் கொக்கரித்தான் காசி.

“அம் வெயிட்டிங்..” காசியிடம் கூலாகக் கூறிய நானி, “அத்தை… சில்லுன்னு ஒரு லெமன் ஜூஸ்” என்றபடி அரசியிடம் சென்றான்.

பாண்டியம்மாளை பார்வையாலே முறைத்துவிட்டு காசி வெளியேறினான்.

‘போடா போ… உன் பார்வை மாதிரி பல ஆள பார்த்தவ நான்’ என்று உள்ளுக்குள் கூறிய பாண்டியம்மாள்.. அங்கிருந்த தன் மகள் அமுதாவை தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்து.. “இப்போ என்ன சொல்ற, நானிக்கு மியாவை கட்டிக்கொடுக்க சம்மதமா?” எனக் கேட்டார்.

நானியை காலையில் பார்த்த அமுதா அவன் வீட்டில் சும்மா இருப்பதாகவே நினைத்திருந்தார், ஆளும் பார்க்க மாநிறமென்று கருதியவர் பாண்டியம்மாளிடம் யோசிப்போமென்று பட்டும்படாமல் தெரிவித்திருந்தார்.

“இப்போது அவனொரு மாவட்ட ஆட்சியர், மினிஸ்டரையே கட்டுப்படுத்துகிறான்” எனத் தெரிந்த பிறகு.. முகமெல்லாம் ஒளிவீச,

“உன்னை மீறி நானென்னம்மா செய்துடப்போறேன். உன் முடிவு தான் என் முடிவு” எனக் கூறினார்.
காலையில் வந்ததும் நானியை மருமகனாக ஏற்றுக்கொள்ள கேட்டதும் யோசித்தவள் இப்போது உடனடியாக சம்மதம் வழங்கியதும் தான் நினைத்தது நடந்துவிடுமென்று கனவு கண்டார்.

குடும்பமே அங்கு நடந்ததை பார்த்துக்கொண்டு தான் இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் நானியை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

“டேய்… இன்னும் உனக்குள்ள எத்தனை அந்நியனை டா.. ஒளிச்சு வச்சிருக்க.. இப்போவே கண்ண கட்டுதே!” (இது நம்ம கபிலன் தாங்கோ).

ஆனால் நானியின் ஆளுமை பேச்சில் அசந்து தான் போனான்.

“இந்த கருவாயன் கலெக்டரா…. நமக்கு வசதி தான்.. பெருமையா கலெக்டர் பொண்டாட்டின்னு வெளியில சொல்லிக்கலாம். மினிஸ்டரையே ஓட விட்டுட்டியே கருவாயன்.” அவனை பார்த்ததும் மயங்கியவள்… நானியின் கம்பீரத்தில் வாட்டர் பால்ஸை ஓபன் செய்தாள்.

“ஏங்க, உண்மையாவே இது நம்ம நானி தானங்க… எம்புட்டு தைரியமா, அமைச்சர்கிட்டவே பேசுறான்.”
“காலெக்டர்னா சும்மாவா பத்மா.. எம்மவனாச்சே!”(தாய் தந்தை இருவரும் பெருமை கொண்டனர்)
அரசியளித்த பழச்சாற்றினை ரசித்துக்குடித்துக் கொண்டிருந்த நானியின் கரம் பற்றி குலுக்கிய நந்து… “சும்மா கலக்கிடீங்கண்ணா” என்று குதுகளித்தாள்.

“இது அவ்வளவு பெரிய சீனெல்லாம் இல்லையே நந்தும்மா” (உனக்கு தெரியுது உன் வீட்டு ஆளுங்களுக்கு தெரியலையே நானி) என சிரித்த நானி, “ஜூஸ் நல்லா இருந்துச்சு அத்தை” என்றவனாக அங்கிருந்து நகர்ந்தான்.

நானி மேலேற படிகளில் கால் வைக்க… படிகளுக்கு அந்தபுறமிருந்து வந்த பேச்சுக்குரலில் அங்கேயே நின்றான்.

காசி சென்றதும் கவலையுடன் உள் நுழைந்த சிவாவைப் பார்த்து..

“என்னடா, ஏன் இப்படி இருக்க?” எனக் கேட்ட கபிலனிடம்… “அந்த மினிஸ்டர் மாமாவை எதுவும் செய்துட மாட்டாரே!” அச்சத்துடன் கேட்டிருந்தாள்.

‘நான் உன்னை வெறுக்கும் நிலையிலும் என்னுயிர் நினைத்து கவலை கொள்கிறாயே, அவ்வளவு காதலா என் மீது?’

நானியை நினைத்து சிவா கொண்ட கவலை அவன் மீதான அவளின் அழுத்தமான நேசத்தை பறைசாற்றியது. அனைவரும் சிவாவின் கோணத்தில் பார்க்கவேயில்லை, நானி காசியிடம் பேசியதை வியந்து மட்டுமே பார்த்திருந்தனர். காசியால் நானிக்கு ஆபத்து வருமென்று யோசிக்கவேயில்லை. இதனை எண்ணிப்பார்த்தவனுக்கு அவளின் மீது காதல் ஊற்று போல் பெருகியது. ஆனால், அவன் ஆசைப்பட்டாலும் தன் காதலை வெளிப்படுத்த முடியாதே.

சிவா அவ்வாறு கேட்டதிலிருந்தே… நானியை காசி இறுதியாக மிரட்டியதை அப்போது தான் கோவிலிலிருந்து வந்த சிவா கேட்டுவிட்டாள் என்பதை அறிந்த கபிலன்…

“அவன் நினைச்ச உடனே எதுவும் செய்துவிட நானி சாதாரண ஆளில்லை. நீ எதற்கும் பயப்படாதே.. எல்லாம் அவன்(நானி) பார்த்துப்பான்” என்றான்.

“இல்லைண்ணா, மாமாவிற்கு ஏன் தேவையில்லாத வேலை. அவங்க கேட்டதை செஞ்சு குடுத்திடலாம்ல,” அவள் குரல் அழுகையில் ஒலித்ததோ.

“ஹேய்..! என்ன இதுக்கு போய் அழுதுகிட்டு.. நானிக்கு ஒன்றுமாகாது.” ஒருவழியாக சிவாவை ஆறுதல் படுத்திய கபிலன், “நானியை ரொம்ப பிடிக்குமோ!” என புன்னகையுடன் வினவினான்.

அவன் அவ்வாறு திடீரெனக் கேட்க கூடுமென நினைக்காத சிவா அதிர்ந்து விழிக்க, அவள் என்ன பதிலளிக்க போகிறாளோ என்று நானி தன் காதினை கூர்மையாக்கினான்.

“மாமாக்கு தான் என்னை பார்த்தாலே பிடிக்காது.” கண்ணீருடன் கூறியவள் கபிலனின் முன் நிற்க முடியாது ஓடிவிட்டாள்.

நானி அவளின் பதிலில் உறைந்தேவிட்டான்.

“என் கோபத்தில் இருக்கும் உன் மீதான காதலை நீ உணரவேயில்லையா ரனிம்மா” (…சிவ(ர)ஞ்ச(னி)…)

‘உண்மையை நீ கூறும் வரை உன் காதல் அவளுக்கு தெரியப் போவதேயில்லை.’ நானியின் மனம் கூக்குரலிட்டது.

“தன்னால் என்றேனும் அதனை வெளியே சொல்ல முடியுமா.? என் செயலுக்கான காரணம் தெரிந்தால் ஏற்றுக்கொள்வார்களா?”
மனதில் ஏற்பட்ட ரணம் என்று தீருமோ?

நாட்கள் மெல்ல நகர்ந்தன,

அன்று காலை நந்து எழும்போதே அவளின் படுக்கைக்கு அருகில் ஒரு கவர் இருந்தது. அது யார் வைத்திருப்பார்கள் என யோசித்தவள் கவரினை பிரித்து பார்க்க ஆகாய வர்ணத்தில் தங்க கரையிட்ட சல்வார் காட்சியளித்தது. பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது. அதற்கு ஏற்றார் போன்ற அணிகலன்களும் உடனிருக்க, அப்போதே குளித்து அதனை அணிந்தவள் புத்தம் புது மலராக அறையை விட்டு வந்தாள்.

“என்ன மேடம் காலையிலே கலக்குறீங்க..” முகத்தில் தவழும் புன்னகையுடன் கேட்ட சிவாவிற்கு வெட்கத்தை பரிசாக அளித்தாள் நந்து.

அவளின் அழகையும் வெட்கத்தையும் ஒரு ஜோடி விழிகள் காதல் பொங்க ரசித்தது.

கபிலனின் ரசிப்பினை மற்றொரு ஆள் கண்டுகொண்டது.

நந்துவின் வெட்கத்தை ஆச்சரியமாகப் பார்த்த சிவா… “பாருடா மேடத்திற்கு வெட்கம் எல்லாம் வருது…” சிவா கேலி செய்ய… “போடி!” என்ற நந்து அவளிடமிருந்து ஓடினாள்.

“எனக்கு அண்ணனா வர போறவருக்கு வெட்கத்தை கொஞ்சம் மிச்சம் வைங்க மேடம்”, சிவாவின் குரல் நந்துவை துரத்தியது.

“சிவா கூறும் அண்ணன் நீதான்டா மாப்ள.” கபிலனின் ரசிப்பை கண்டு கொண்ட விழிகளுக்கு சொந்தக்காரன் நானி.

தனக்கு மிக அருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பிய கபிலன் அங்கு சற்றும் நானியை எதிர்பார்க்கவில்லை.

“நானி!” அதற்கு மேல் என்ன கூறுவதென்று தெரியாமல் முழித்தவனிடம்,

“இன்னும் என்னடா நானின்னு கூப்பிட்டிட்டு, மச்சான் சொல்லுடா மாப்ள” என்ற நானியை  உணர்ச்சி மிகுதியில் கபிலன் அணைத்துக்கொண்டான்.

இவர்கள் மாப்ள, மச்சான் என்று உருகினால் கபிலனின் காதல் கைகூடிவிடுமா? யார் காதலை ஏற்க வேண்டுமோ அவளே காதலுக்கு எதிரியாக நிற்பாளென்று கபிலன் மட்டுமில்லை நானியும் எதிர் பார்த்திருக்க மாட்டான்.

“சீக்கிரம் காதலை சொல்லிடுடா சொல்லாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அக்காதலே எதிரா திரும்பும்.” நானியின் வார்த்தை கபிலனுக்கு சுத்தமாக புரியவில்லை. அவன் வாழ்வில் ஏற்பட்ட வலி நானியை அவ்வாறு பேச வைத்தது.

“அவள் உன் தங்கச்சிடா”, கபிலன் கூறியதில் அட்டகாசமாய் சிரித்த நானி, “நீ என் பிரண்ட் டா… என் பிரண்ட்க்கு நந்து மாதிரி ஒரு பெண்ணும், என் தங்கச்சிக்கு உன்னை மாதிரி ஒரு பையனும் தேடினாலும் கிடைக்காது.”

நானியின் வார்த்தைகள் மனதிலிருந்து வெளிவந்தது.

ஒருவரை மனதிற்கு நெருக்கமாக வைக்க காலம் காலமாக அவருடன் பழக வேண்டுமென்றில்லை, ஒரு நாள்… ஒரு மணி நேரம்… ஒருவரையொருவர் பார்க்கும் நேரம் போதும். அந்த புரிதலே இங்கு நானிக்கு கபிலனிடத்தில் தோன்றியது.

நானியின் கூற்றினை ஏற்றுக்கொண்ட கபிலன் நாளையே தன் காதலை நந்துவிடம் கூற முடிவெடுத்தான்.

கபிலனின் காதலை நந்து ஏற்பாளா?

error: Content is protected !!
Scroll to Top